Illatha Makalir Thinam / இல்லாத மகளிர் தினம்

இல்லாத மகளிர் தினம்

மாட்சிமிகு மனித இனத்தின் வேராயிருக்கும் பெண்மை,
பேச்சிலடங்கா பெருமை மிக்கது.
மூச்சுக்கும் இனிமை சேர்க்கும் இயல்பு ஆனாலுமென்ன
மகளிர் மாறாத கண்ணீரோடும் ஆறாத காயங்களோடும்

வாழ்வில் போராடும் நிலை இன்றும்.
ஏடும், எழுத்தும், நாடும் நாளும் போற்றும் பெண்,
நடைமுறையில் நடைப்பிணமாய் நசுக்கப்படுவதுமேன்…?
கற்பென்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவென

பொங்கி முழங்கிட புறப்பட்டதால்த்தான் ஆறாத காயங்கள்
மகளிருக்காய் ஆனதுவோ..?
கருவிலே பெண்ணெனத் தெரிந்தால் கலைக்கப்படும் நிலைதொடர,
கல்யாணம் வேண்டுமென்றால் பெண்ணை விலைபேசும் நிலைவேறு.

வரதட்சணைத் தொகையங்கு வந்து சேரவில்லை என்றால்
தீக்குளிக்கும் சீதைகள்தான் தினம் எத்தனை எத்தனை..?
ஹஒருவனுக்கு ஒருத்தி´ எனும் முறை மாற்றி ஒரு’தீ ´உடலெரிக்கும்
பாவமுறு மாறாக் கொடுமைகளாய் மகளிருக்குத் தொடர்கிறதே…

மாறாத கண்ணீரும் ஆறாத காயங்களும் மகளிருக்கு வேண்டாம்.
சிறகொடிந்த பறவைகளாகப் பெண்கள் மரபுப் பாதையில்
மனங்குறுகி துயர் சுமந்து நடந்தது போதும்…
துணிவான பெண்கள் தொல்காப்பியத்தில் மட்டுமல்ல…

துல்லியமாய்க் கண் எதிரிலும் தோன்ற வேண்டும்.
பெண்ணினம் தலைகுனிந்து நின்றதால்
எம் எத்தனையோ தலைமுறைகள் தலைமறைவாகின
நிகழ்காலப் பெண்களினம் தயக்கமின்றி

தலை நிமிர்ந்து வாழத் துணிந்து விட்டால்
வருங்காலப் பெண்களுக்கு தேசீயகீதமாய்த் திகழலாம்
அதுவரை உண்மை இல்லா மகளிர் தினத்திற்காய்
‘சர்வ மகளிர் தினம்´ என நாள் ஒன்றினை ஒதுக்கிப்

போடும் கோஷங்களும் போகும் ஊர்வலங்களும்
ஒருநாள் வேஷங்களே…ஒருநாள் வேஷங்களே…

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *