மலர்கள் மலர்வதெல்லாம்…
மண்ணிலே விதையிட்டு கண்போலக் காத்திருந்து,
எண்ணியது நிறைவேற இதழ்விரிக்கும் மலர்கள்,
வண்ணங்கள் கண்டு மனங்களது மலர்ந்தாலும்,
மண்மீது வாடிவதங்கி சருகாகும் நிலையெண்ணியே,
புண்ணாகும் இதயமது ஏக்கத்தால் வலியெடுக்கும்.
புண்ணியம் செய்தாலும் பூக்களது நிலைக்காதென்றாலும்,
கொண்ட நறுமணமோ கூடவே நினைவில்வரும்.
அண்டிவரும் அந்திவேளை அஸ்தமனங்கள் எல்லாம்
மீண்டும் நல்லதொரு விடியலுக்கு வேளைதரும்.
மண்ணில் வேரடியில் வீழ்ந்துமலர்கள் சருகானாலும்,
திண்ணமாய் மீண்டும் மலர்மலர எருவாகும்.
கண்டு மனம்மகிழ உறுதுணையாய் உரமூட்டும்
மலர்கள் மலர்வதெல்லாம் மீண்டும் மலர்வதற்கே…
