Kaasu / காசு

காசு

காசு ஒன்றே கடவுளாமோ…?
பேசாப் பிணங்கூட காசென்றால்
வாய் திறக்குமென உரைப்பதனால்
காசே கடவுளா கருத்தினைக் கூறிடுவாய்.

பாசமிகு பெற்றோரை காசினால் யாரும்
நேசம் நிறை நெஞ்சமுடன் மேதினியில்
வாங்கி மகிழ வழியுமுண்டோ சொல்.
வாசமிகு பூஞ்சோலையாய்

வாழவேண்டிய குடும்பந்தனில்
நீசமுறு வஞ்சனையால் நிதம்

நிம்மதியைத் தொலைத்த மனம்
காசு கொண்டு அமைதியினைக்

கண்டிட முடியுமோ சொல்.
கூசிடாது கூற்றுவன்போல்
கொல்ல வந்த கொடுநோயை
மாற்றிட இனி முடியாதென

வைத்தியர் கை விரித்தவேளை
காசு கொண்டு காலனைத்தான்
கலைத்திட முடியுமோ சொல்.
கருணையருள் இறைவனின்

கடைக்கண் பார்வை வேண்டி
காசு கொண்டு யாகஞ் செய்தால்
காரியம் நிறைவேறுமோ சொல்.
சொந்த தேசம் ஏதுமில்லை

சுளை சுளையாய்க் கையில் பணம்
பூரித்துப் பெருமை கொள்ள
பொருந்திடுமா நீயே சொல்.
பாதாளம் மட்டும் பாயும்காசு

பயன்மிகு ஆதாரமானாலும்
தேவையற்றுப் போகும்வேளை
செல்லாக் காசாய் மாறிடுமே
புரிந்து கொள்வாய்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *