Thaikkoru Kaanikkai

தாய்க்கொரு காணிக்கை…
அம்மா…!
அவனிதனில் அத்தனை உயிர்களையும் நெகிழவைக்கும் ஒரு புனிதச் சொல்.
சொல் அல்ல.
ஒருசொல்லால் எழுதப்பட்ட உயிர்ப்பான காவியம்.
காவியம் அதில் கலந்திருக்கும் பல மிதமான கற்பனை.
கற்பனைக்கே இடமின்றி; நிசமான நிகழ்வுகளால் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் அபரிதமான அன்பின் வெளிப்பாடே தாய்மை.
தாய் அவள் எம் உயிரென்னும் உலகுக்கு வளம் அளித்து வலம் வரும் சூரியன.
சூரியனோ கீழ்த்திசைப் பார்த்துத் தோன்றி; மாலைப்பொழுது மேற்கில் அஸ்தமனம.
அஸ்தமனமாகாத ஆத்மார்த்தமான கருணை ஒளியாலே இருளோட்டி எத்திசையும் தன்பிள்ளை வாழ்வுக்காய்த் தனை ஈனும் உள்ளந்தான் அன்னைக்கு.
அன்னைமனம் தன்பிள்ளை பசி துயரம் பொறுக்காது.அதை மாற்ற ஓடிவந்து அமுதளிக்கும் அட்சயபாத்திரம்.
பாத்திரம் மட்டும் அறிந்து பிச்சையிடுபவள் அல்ல தாய.
தாய்தன் அன்புக்குப் பாத்திரமான அத்தனை உயிர்களுக்கும் தேவைகளைப் பூர்த்தி செய்யப் புரிந்திடுவாள் பலசேவை.
சேவை பல புரிந்து சீராட்டி ஆளாக்கிவிட்ட அன்பின் வடிவம்;. எம் ஆராதனைக்குரிய பேசும் தெய்வம். 
அவளே எம்தாய்.
 
தாயவளுக்கே உரித்தான உன்னதங்கள் கொண்டதுதான் கருணை.
கருணையுடன் கருவிலே உயிர் சுமந்து சுவாசிக்கும் மூச்சிலும் பங்களித்து பிரசவத்தின் போது மரணத்தின் வாசற்கதவை எட்டிவிட்டு வந்து மறுபிறவி எடுக்கும் மகத்தான புதுப்பிறவி.
 
பிறவி தந்த பெற்றவளுக்குப் பிரதிபலனளிக்க இப்பிறவிதனில் முடியாது.
முடியாது என்றாலும் முழுமனதாய் நாம் தரலாம் காணிக்கை காணிக்கையாய் 
 
என் அன்பின் உணர்வுகளைத் மணிச்சரமாக்கி தாயே…!
தந்து நின்றேன் கவிதையிதாய்…

Comments

One response to “Thaikkoru Kaanikkai”

  1. kovaikkavi Avatar

    மணிச்சரம் தாய்கொரு காணிக்கைசொல்லோவியம் பார்த்தேன். காவியமாய் விரியட்டும்வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *